உத்திரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, குற்றங்களைத் தடுக்க காவல்துறை மூலம் சீரிய நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் இந்துக்கள், குறிப்பாக பலவீனமானவர்களுக்கு, எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரே வாரத்தில் இரண்டு ஹிந்து பெண்கள், அதுவும் பிராதாப்கர் மாவட்டத்திலேயே இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு அற்ப காரணத்துக்காக முகமது அக்லக் முகமத் வாசிம் மற்றும் முகமத் சாஹில் ஆகிய மூவரும் எட்டு வயது பெண் குழந்தை லாலி பாண்டேவை துப்பாக்கியால் சுட்டனர். சுடப்பட்டு சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நாட்களில் குழந்தை லாலி உயிரிழந்தார். அதன் பிறகு கணவர் சோட்டேலாலை இழந்த கைம்பெண், சந்தோலா தேவி என்ற 60 வயது மூதாட்டி அவர் வீட்டருகில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பத்தினரால்மயக்கமடையும் வரை கம்புகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டார். அவரும் பிரயாக்ராஜ் மருத்துவமனையில் மோசமான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் ஒரு நாளில் உயிரிழந்தார்.
மே 26 அன்று, ஃபதான்பூர் காவல்துறையின் கீழ் வரும் ஜகானிபூர் கிராமத்தில் சந்தோலா தேவி, தனது ஊனமுற்ற மகனின் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது கலீல் என்பவரின் ஆடு கடைக்குள் புகுந்து கடையில் இருந்த இனிப்புகளைத் தின்றுவிட்டது. இதனால் கோபமடைந்த சந்தோலா தேவி இதைப்பற்றி கலீலிடம் புகார் செய்த போது கலீல் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். கம்புகளால் தேவியை அடித்ததோடு அந்தக் கும்பல் அவர் மீது கற்களையும் எறிந்துள்ளது. பிரயாக்ராஜ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட தேவி மறுநாள் மாலை உயிரிழந்தார்.
ஆஷிக் அலி(கலீலின் மகன்), அர்ஷத், ஹஸ்னைன், மினாஸ் ஆகியோருடன் கலீல் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களான நஜ்பீன் பனோ மற்றும் அனாரி பேகம் ஆகியோர் மீதும் சந்தோலா தேவியை அடித்துக் கொன்ற குற்றத்திற்காக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே கலீல் சந்தோலா தேவியிடம் பிரச்சினை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அவரது கடை முன் எச்சில் துப்புவது மற்றும் வம்பிழுப்பது என்று பிரச்சினை செய்ததால் அடிக்கடி அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தேவி இறந்ததையடுத்து அவரது குடும்பத்தினர் சடலத்தை சாலையில் வைத்து குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் நஷ்ட ஈடு கேட்டும் போராடினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை முயற்சி செய்த போது ஒரு இளைஞரை அடித்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது. 3 மணி நேர குழப்பத்திற்கு பின் போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த ராணிகஞ்ச் பகுதியின் துணை மாஜிஸ்திரேட் ராகுல் குமார் மற்றும் வட்டாட்சியர் அதுல் அஞ்சன் திரிபாதி ஆகியோர் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்த பின்னரே அமைதி திரும்பியது.
இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? நாங்கள் ஒரு இலாப நோக்கற்றவர். நன்கொடை அளித்து, எங்கள் பத்திரிகைக்கு பணம் செலுத்த உதவுங்கள்.