மத்திய பிரதேசத்தில் ராஜேஷ் பூல்மலி என்ற ஆர்எஸ்எஸ் உறுப்பினர் முஸ்லிம் கும்பலால் தாக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மே18 அன்று இந்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்ததாக ekatamabharat.com என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவரது உடல் கொண்டுவரப்படும் தகவல் பரவியவுடன் தீப்லா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் கிராமத்தார் குழுமினர். காவல்துறையின் அலட்சியத்தை சுட்டிக்காட்டிய அவர்கள் விரைவில் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ராஜேஷ் உயிருடன் இருந்திருப்பார் என வேதனை தெரிவித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஹிந்து ஜக்ரன் பன்ச் அமைப்பினர் இஸ்லாமியர்களின் ஆட்சேபகரமான ஒரு ஃபேஸ்புக் பதிவை எதிர்த்து ராஜேஷும் மற்ற சிலரும் ராம்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று தெரிவித்தனர். ஆனால் காவலர்கள் இந்த விஷயத்தை அலட்சியமாக கையாண்டதாகவும் குற்றவாளியின் மேல் ‘அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு விளைவித்தல்’ எனும் சாதாரண பிரிவின் மேல் வழக்கு பதிந்ததாகவும் அதனால் முஸ்லிம்கள் அச்சமின்றி ராஜேஷை அடித்துக் கொன்றதாகவும் குற்றம் சாட்டினர்.
தற்போது தீப்லா கிராமத்தைச் சேர்ந்த 17 முஸ்லிம்கள் – ஸர்ஃபராஸ், சல்மான், ஷபீர், அர்மான், ஷாகிர், ஆசிஃப், அப்துல், அமீன், பர்கத், வஹித் ரஹ்மான், வஹித் குல்லு, சோனு, சல்மான் யாகுப், சாதிக், இர்ஷத், பர்வேஸ், யூசுஃப் மேலும் ஏழு பேர் மீது ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராம்நகர் காவல்நிலைய துணை ஆய்வாளர் பி.சி.ஷிண்டே இந்த விஷயத்தை அலட்சியமாக கையாண்டு ராஜேஷ் இறக்க காரணமானதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கிராமத்தார் கோரியுள்ளனர். கிராமமே பதட்டமாக உள்ள நிலையில் அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கந்த்வா நகரத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக ராஜேஷின் உடல் கிராமங்கள் வழியாக சுற்றி கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும் Patrika.com அதன் செய்தி அறிக்கையில் பழைய பகை காரணமாக இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதலில் ராஜேஷ் காயமடைந்ததாகவும் மேலும் 8 பேரும் காயமடைந்த நிலையில் காவல்துறை இரு தரப்பிலிருந்தும் 17 பேர் மீது வழக்கு பதிந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ராஜேஷின் தந்தை கூறுகையில், “என் மகன் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டான்” என்றார். மேலும், முன்னரே காவல்துறையை எச்சரிக்கை செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றஞ்சாட்டினார். காவல்துறையும் பிற அரசு அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கும் வரை கிராமத்தினர் அவரது சடலத்தை மயானத்திற்கு எடுத்துச்செல்ல விடவில்லை.
(மேற்கண்ட பதிவு Hindu Post ல் வெளியான ஆங்கில செய்தியின் தமிழாக்கம்)
இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? நாங்கள் ஒரு இலாப நோக்கற்றவர். நன்கொடை அளித்து, எங்கள் பத்திரிகைக்கு பணம் செலுத்த உதவுங்கள்.